-
பயங்கரவாதி அப்சல் குரு காங்கிரசாருக்கு மருமகனா ? நிதின் கட்காரி ஆவேச கேள்வி
புதுடில்லி: பார்லி., தாக்குதல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை வழங்குவதில் காங்கிரஸ் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த பயங்கரவாதி காங்., கட்சிக்கு மருமகனா? என்ற கட்காரியின் பேச்சு டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் சூட்டை கிளப்பியிருக்கிறது. இவரது கேள்வியில் எவ்வித தவறும் இல்லை என பா.ஜ., தரப்பில் பதில் தரப்பட்டிருக்கிறது.
பா.ஜ., அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பொதுக்கூட்ட மேடையில் பேசும் போது, லாலு, மாயாவதி, மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர், காங்., தலைவர் சோனியாவுக்கு ஆதரவு தெரிவித்து ( நாய்கள் போல) சுற்றி வருகின்றனர் என்று பேசியிருந்தார். கட்காரியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பை கிளம்பியது. பின்னர் தான் ஒரு உவமையாகத்தான் சொன்னேன், யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என கட்காரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டேராடூனில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பார்லிமென்ட் தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்ட அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை வழங்குவதில் கால தாமதம் செய்யப்பட்டு வருகிறது. டில்லி முதல்வரிடம் கேட்டால் உள்துறை உத்தரவுக்காக காத்திருப்பதாக கூறுகிறார். அறிக்கைகள் மீது அமர்ந்து இருக்கிறாரா முதல்வர்? அப்சல் குருவை காப்பாற்ற ஏன் காங்கிரஸ் முயற்சிக்கிறது? அப்சல்குரு என்ன காங்கிரசாருக்கு மருமகனா? இவருக்கு பெண் கொடுக்கப் போகிறீர்களா என்று கேட்டார்.
பொங்கி எழுந்தது காங்., : கட்காரியின் இந்த பேச்சு காங்., மத்தியில் கடும் அதிருப்தியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவரது பேச்சுக்கு காங்., தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. காங்., மேலிடம் வெளியிட்டுள்ள செய்தியில், கட்காரி மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது. காங்., செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், கட்காரியின் பேச்சு மோசமாக உள்ளது. இவ்வாறு இழி சொல்லை பேசுவதை நிறுத்திக கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இதற்காக நான் ஒன்றும் மன்னிப்பு கேட்க தேவையில்லை என கட்காரி கூறியுள்ளார். பா.ஜ., வும் கட்காரியின் பேச்சில் தவறு ஒன்றும் இல்லை என கூறியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)


0 comments: