-
ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம்
டெல்லி: போபால் விஷ வாயு சம்பவத்துக்கு காரணமான யூனியன் கார்பைட் நிறுவன முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவில் இருந்து தப்பவிட்டது யார் என்பதை அறிந்து கொள்ள எந்தவித ஆவணமும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஆண்டர்சனை அப்போதைய உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ்தான் தப்ப விட்டதாகவும், அதற்கும் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் அர்ஜுன் சிங் ராஜ்யசபாவில் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து ராஜ்யசபாவில் சிதம்பரம் கூறியதாவது:
ஆண்டர்சன் பாதுகாப்பாக அமெரிக்கா செல்ல வழி வகை செய்யப்பட்டதாக அப்போதைய வெளியுறவுத் துறை செயலராக இருந்த எம்.கே.ரஸ்கோத்ரா கூறியுள்ளார். அர்ஜுன் சிங்கும் அதையே கூறியுள்ளார். அவர்களது கூற்றை உறுதி செய்யவோ, மறுக்கவோ கூடிய நிலையில் நான் இல்லை.
காரணம், ஆண்டர்சன் தப்பிச் செல்வதற்கு முன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தொலைபேசி மூலம் மாநில அரசுக்கு நெருக்குதல் கொடுத்தார்கள் என்பதற்கும், அவர் பாதுகாப்பாக செல்வதற்கு உறுதி அளிக்கப்பட்டது என்பதற்கும் எந்த ஆவணமும் இல்லை.
ராஜீவ் காந்திக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என அர்ஜுன் சிங் கூறியுள்ளதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். ஆண்டர்சன் பாதுகாப்பாக வெளியேற அமெரிக்க தூதரக அதிகாரிகள் வலியுறுத்தியிருப்பதற்கு வாய்ப்புள்ளது. அதை நெருக்குதல் என்றோ அல்லது அவர்களது கடமை என்றோ விவரிக்கலாம்.
நமது தவறுகளுக்கு அமெரிக்காவை நாம் ஏன் குறை கூற வேண்டும்?.
எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி இப்போது கேட்கும் கேள்விகளை 2001ல் அவர் சட்டத் துறை அமைச்சராக இருந்தபோது கேட்டிருந்தால், என்னைவிட திறமையான உள்துறை அமைச்சர் (எல்.கே.அத்வானி) அதற்கான ஆவணங்களைத் தேடி கண்டுபிடித்து பதில் கூறியிருந்திருப்பார்.
அதைவிட்டுவிட்டு இப்போது எங்களை குறை சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
கடந்த 25 ஆண்டுகளாக நாம் பல தவறுகளை செய்துள்ளோம். நாடாளுமன்றம், அதிகாரிகள், அரசியல்வர்க்கம் ஆகியவை பாதிக்கப்பட்டோரை கைவிட்டுவிட்டன. நீதிமன்றத்தின் பின்னால் நாம் ஒளிந்து கொள்ளலாம் என நாடாளுமன்றமும், அதிகாரவர்க்கமும் நினைத்துவிட்டன.
போபால் விஷவாயு நஷ்டஈடு வழக்குகள் தொடர்பாக 1989 மற்றும் 1991க்கு இடையிலும், கிரிமினல் வழக்குகள் தொடர்பாக 1989 மற்றும் 1996க்கு இடையிலும் பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த காலகட்டத்தில் 3 பேர் பிரதமர்களாக (வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ்) இருந்தனர்.
இவர்கள் மூவருமே ஏதாவது ஒரு வகையில் இந்தப் பிரச்சனையை சரியாக கையாளாததற்கு பொறுப்பாவார்கள்.
ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை வலுப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் இந்திய கிளைகளை எவரெடி நிறுவனம் வாங்கிவிட்டது. சர்வதேச சொத்துகள் டெல் நிறுவனம் வாங்கிவிட்டது.
இந்த சம்பவத்துக்கு பொறுப்பாளி யார் என்பது குறித்த வழக்கு 2005 முதல் ஜபல்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பொறுப்பாளி யார் என்பது முடிவானவுடன் நஷ்டஈட்டை நாம் கோர முடியும் என்றார் ப.சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)


0 comments: